தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பீட்டில் 2000 பேர் நேரடியாகவும், 4000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 192 தொழில்மனைகளுடன் பகுதி-2ல் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 1800 பேர் நேரடியாகவும், 4000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 171 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,000 பேர் நேரடியாகவும், 2,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பபு பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5700 சதுர அடி கட்டிட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டிடம் என மொத்தம் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் பொது வசதிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவைகளை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: