குன்னூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கையூர், வாகப்பண்ணை, மெட்டுக்கள் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு இருளர் பழங்குடியின மக்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் இந்த கிராமம் தனித்தீவுபோல காட்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் தேன் எடுத்தல், குருமிளகு விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் வாழும் இந்த மக்கள், சாலை வசதிகள் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலையில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெட்டுக்கள் அருகே குடகூர் கிராமத்தை சேர்ந்த சூணன் என்பவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் சுமந்து வந்தனர்.