போளூர் அடுத்த முருகாபாடியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

போளூர் : போளூர் அடுத்த முருகாபாடி கொல்லைகொட்டாய் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர் ஒன்றியம், முருகாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைகொட்டாய் பகுதியில் உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைய கூடியது. கொல்லைகொட்டாய் பகுதியில் 350க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

அதேபோல், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் 107 பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் 45 வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகே வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பு  அமைந்து உள்ளது.

இங்கு 30 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகின்றனர். இந்த சாலை முருகாபாடி, வெண்மணி, ஓகூர் ஆகிய 3 ஊராட்சிகளையும் இணைக்க கூடிய பிரதான சாலையாக அமைந்து உள்ளது. இந்த 3 கிராமங்களையும் உள்ளடக்கிய சாலை பகுதியில் 150க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாகதான் வேலைக்கு செல்பவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சென்று வர வேண்டும்.

இந்நிலையில், இந்த சாலையானது மழைக்ககாலங்களில் சேறும், சகதியுமாக மாறி அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, தங்கள் பகுதிக்கு தரமான சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: