ஜனாதிபதி தேர்தல்... எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்தார்!!

புதுடெல்லி:ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒடிசா பாஜ தலைவர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜ கூட்டணி வேட்பாளர் முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

யஷ்வந்த் சின்கா வேட்பு மனுவில் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் 50 பேர் முன்மொழிந்தும் 50 பேர் வழிமொழிந்தும் இருக்கிறார்கள்.யஷ்வந்த் சின்கா வேட்பு மனுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, மல்லிகார்ஜுனா கார்கே, ஜெயராம் ரமேஷ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருச்சி சிவா, ஆர். ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி பொது வேட்பாளரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவுக்கு இதுவரை 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன

யார் அந்த யஷ்வந்த் சின்கா?

தற்போது 84 வயதாகும் யஷ்வந்த் சின்கா, பீகாரின் பாட்னாவை சேர்ந்தவர். 1960 முதல் 24 ஆண்டுகள் ஐஏஎஸ்.சாக பணியாற்றியவர். பின்னர், 1984ல் ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இணைந்தார். 1986ல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1988ல் மாநிலங்களவை எம்பியாகவும் ஆனார். 1990 முதல் 1991 வரை சந்திர சேகர் அரசில் ஒன்றிய நிதி அமைச்சராக இருந்துள்ள யஷ்வந்த் சின்ஹா, 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பெரும் விசுவாசியாக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஆரம்பம் முதலே கட்சியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்ப்பு குரல் கொடுக்கும் தலைவராக இருந்துள்ளார்.மோடி பிரதமரான பிறகு 2014ல் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். 2018ல் அக்கட்சியில் இருந்து விலகினார். 2021ல் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான பாஜ ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

Related Stories: