ஒரத்தநாடு : தஞ்சாவூர் அருகே திருவோணத்தில் அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்கள், செடிகளில் வெட்டுப்பூச்சிகள் தாக்கி சேதப்படுத்தின. ரூ.3 லட்சம் பேரிடர் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வேளாண் வட்டாரம் காயாவூர் கிராமத்தில் சுரேஷ் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் ஆடுதுறை 37 நெல் ரகத்தினை (120 நாள் வயது கொண்ட) நாற்றுவிட்டு கோடை சாகுபடி செய்து நல்ல நிலையில் பயிர்கள் வந்து அது பூ பூத்து, கதிர் வந்து அறுவடை செய்ய இன்னும் 15 தினங்கள் இருக்கும் நிலையில் மேற்கண்ட 10 ஏக்கர் நெல் கதிர்கள் மற்றும் நெல் செடிகள் அனைத்தையும் வெட்டு பூச்சிகள் வந்து தாக்கி பெரும் பகுதியை சேதப்படுத்தி விட்டது.
இதனால் இதுவரை நெல் விவசாயம் செய்வதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000 வீதம் 10 ஏக்கருக்கு ரூ.2,00,000 வரை கடன் வாங்கி செலவு செய்து, அந்த நெற்கதிர்களை கையாடி, கொள்முதல் செய்து வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று கனவு கண்டு இருந்த வேளையில் இழப்பு நேரியிட்டதே என எண்ணியும், இனி வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறோம் என்றும் கருதியும், விவசாயி சுரேசும், அவரது மனைவியும் மன வேதனையில் உள்ளனர்.
எனவே வெட்டு பூச்சியால் கோடை நெல் சாகுபடியை அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயி சுரேஷ் குடும்பத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வீதம் 10 ஏக்கருக்கும், ரூ.3,00,000 லட்சம் வரை பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து வழங்கி உதவிட தமிழக அரசையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்திடம் திருவோணம் விவசாய சங்க செயலாளர் சின்னத்திரை கோரிக்கை விடுத்துள்ளார்.