புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதிமுர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். திரெளபதிமுர்மு ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, முடிந்தவரை பல மாநிலத் தலைநகரங்களுக்குச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவுதர தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், ம், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியின் போது, டி.ஆர்.எஸ் கட்சியின் கே.டி. ராமராவ் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.