விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை சமையலர் போராட்டம்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிபேட்டையில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு சமையலராக பழனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ராணுவத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர். இதே விடுதியில் காப்பாளராக டி.பி.கிருஷ்ணன் என்பவர் பணியாற்றுகிறார். இந்நிலையில், சமையலுக்கு தேவையான எண்ணெய், அரிசி, பருப்பு போன்றவற்றை காப்பாளர் டி.பி.கிருஷ்ணன் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்துவந்ததாக தெரிகிறது. இதை சமையலர் பழனி தட்டிக்கேட்டபோது, `நீ யார் அதை கேட்க நீ போய் என்னுடைய காரையும், வீட்டையும் சுத்தம் செய் உன்னுடைய வேலை இதுதான். அதை செய்யவில்லை என்றால் உன்னை பணியில் இருந்து நீக்கி விடுவேன். ஏற்கனவே மூன்று பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளேன்’ என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கு பழனி, `காரையும் வீட்டையும் சுத்தம் செய்யும் வேலையை செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விடுதி காப்பாளர் டி.பி.கிருஷ்ணன், பழனியை ஓட, ஓட விரட்டி அடித்துள்ளார். இதுபற்றி பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்தனர். இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். எனவே, காப்பாளர் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்துடன் பழனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது விடுதி காப்பாளர் டி.பி.கிருஷ்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிப்பதாகவும் பழனி கூறினார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: