மதுராந்தகம் ஒன்றியம் எல்என்புரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் இன மக்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே எல்என்புரம் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி இருளர் குடுபங்கள் தவித்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் எல்என்புரம் ஊராட்சி உள்ளது. இங்கு, 33 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாகவே இங்கு வசித்து வரும் இந்த மக்களுக்கு இதுவரையில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு சார்பில், வழங்கப்படும் இலவச வீடுகள் இவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அவர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளும் கிடைக்கப்பெறவில்லை. இதனால், அரசு சார்பில் வருவாயை பெருக்கும் நோக்கில் வழங்கப்படும் மானிய விலையிலான கறவை மாடுகள், மானியத்துடன் கூடிய தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி திட்டங்கள் போன்ற எந்த பயனும் அவர்களுக்கு இதுவரையில் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் மக்கள் இனிமேலாவது அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தித்தர அரசு சார்பில் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் இருளர் இன மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து பலமுறை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: