சென்னை: செல்போனில் நீண்ட நேரம் சாட்டிங் செய்த இளம்பெண் திடீர் எனதெற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிஷா (21). இவர், மதுரவாயல் அருகே அடையாளம்பட்டு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மற்றொரு ஊழியர் லோகேஸ்வரி. இவர்கள் இருவரும் மதுரவாயல், லட்சுமி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு யாருடனோ நீண்ட நேரம் செல்போனில் நிஷா சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த லோகேஸ்வரி தூங்க சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை லோகேஸ்வரி எழுந்து பார்த்தபோது, சமையலறையில் நிஷா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், நிஷாவின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, நிஷாவுடன் செல்போனில் சாட்டிங் செய்த நபர் யார், என்ன காரணத்தினால் நிஷா தற்கொலை செய்துகொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.