கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்

சென்னை: கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும்  அளக்குடி - திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர்  அமைப்பதற்காக ரூ.540 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால் தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி  நீர் வீணாவதை தடுக்க முடியும். வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அளக்குடி பகுதியில் கடைமடை கட்டமைப்பு கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அளக்குடி -திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர், மாதிரிவேளூர் -நல்லாம்புத்தூர் தடுப்பணை ஆகிய இரு திட்டங்களையும் செயல்படுத்தினால் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: