இந்தாண்டு தொகுப்பூதியத்தில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை: தொகுப்பூதிய திட்டத்தில்  இந்த ஆண்டு 8 ஆயிரம் ஆசிரியர்கள்  நியமனம் செய்யப்படுவார்கள் என புதுக்கோட்டையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டையில் நேற்று  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி  குரல் எழுப்ப வேண்டிய ஒரு காலம் இந்த காலம். மாநில கல்விக்கொள்கையை ஒரு  ஆண்டு காலத்திற்குள் வடிவமைக்க தமிழக முதல்வர் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி  பெற்றுவிட்டு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம்  வழங்கப்படும். அதேபோல், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும்  தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது 13,331 ஆசிரியர்களை  நியமிக்க அனுமதியை முதல்வரிடம் பெற்றுளோம். நிரந்தர பணி  என்பது பெரிய செயல் திட்டம். அதற்கான தேர்வை 5 முதல் 6 லட்சம் பேர்  எழுதுவார்கள். இந்த பணிகள் முடிய நான்கு அல்லது ஐந்து மாதம்ள் ஆகும்.  

அதுவரை ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாக கூடாது  என்பதால் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் தற்போது பள்ளி மேலாண்மை குழு  சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 13 ஆயிரத்து 331  ஆசிரியர்களில் 8ஆயிரம் பேரை இந்த ஆண்டு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ்  நியமனம் செய்து விடுவோம். எஞ்சிய ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் பணி  நியமனம் செய்வோம்.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: