காட்டு விலங்குகளை வேட்டையாடியபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து இளம்பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விருத்தாசலம்:   விருத்தாசலம் அருகே காட்டு விலங்குகளை வேட்டையாடியபோது நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இளம்பெண் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் காசி(27). இவரது மனைவி சாந்தகுமாரி (23). மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்து சாந்தகுமாரி வெளியே வந்தபோது இடுப்பில் வெடிகுண்டு பாய்ந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இச்சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது கணவர் மயங்கிக் கீழே கிடந்த சாந்தகுமாரியை எழுப்பி பார்த்தபோது, இடுப்பில் குண்டு பாய்ந்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற மங்கலம்பேட்டை போலீசார் குண்டு பாய்ந்து காயமடைந்த சாந்தகுமாரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்த போது, அப்பகுதியில் மான், மயில், முயல்கள், காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கு, அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தினமும் இரவில் அங்கு வந்து செல்வது தெரியவந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வேட்டையாட வந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை சுட்ட போது, சாந்தகுமாரி மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் வேட்டையாடும் மர்ம நபர்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் மங்கலம்பேட்டை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: