ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.

நேற்று மாலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2  காட்டு யானைகள் தனது குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீண்ட வரிசையில் நின்று இருந்த வாகனங்களின் நடுவே காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன.

காட்டு யானைகளை கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தினர். திடீரென வாகனங்களை காட்டு யானைகள் துரத்த தொடங்கியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை திருப்ப முயற்சித்தனர்.

அப்போது ஒரு வெள்ளை நிற  காரை கண்டு அச்சம் அடைந்த காட்டு யானைகள் திடீரென காரை தும்பிக்கையால் தாக்கத் தொடங்கின. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய ஒரு நபர் அச்சத்துடன் தப்பியோடினார். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானைகள் திடீரென காரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: