பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை, கள்ளிப்பாளையம், பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். மேலும், விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெற்று வரும் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அமாவாசைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நேற்று வாழைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைந்துள்ளதால் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று பூவன் வாழைத்தார் விலை ரூ. 550 முதல் ரூ. 800 வரையும், ரஸ்தாலி ரூ. 500 முதல் ரூ. 600 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 500 முதல் ரூ. 650 வரையிலும், ஏலக்கி வாழை ரூ. 250 முதல் ரூ. 300 வரையிலும், பச்சை நாடன் ரூ. 250 முதல் ரூ. 350 வரையிலும் மொந்தன் தார் ரூ. 250 முதல் ரூ. 350 வரையிலும் விற்பனையானது. இந்த விலையேற்றம் வாழை பயிரிட்டு வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.