லாகூர்: மும்பை தாக்குதலுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக நிதி திரட்டிய வழக்கில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி சஜித் மஜீத் மிர். இவன் மீதான வழக்கு லாகூர் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், தீவிரவாதத்திற்கு மஜித் நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.