சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை  துவக்கி வைத்தார்.

நாளை  ஜுன் மாதம் 26-ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை (International Day Against Drug abuse and Illicit Trafficking)  முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று (25.06.2022) காலை, மெரினா கடற்கரை, காந்திசிலை பின்புறம் உள்ள மணற்பரப்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மணற் சிற்பங்கள் கண்காட்சியை திறந்து வைத்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆணையாளர், சாந்தோம், ICAT வடிவமைப்பு மற்றும் ஊடக கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட போதை பொருள் ஒழிப்பு குறித்த பெரிய மணற்சிற்ப கண்காட்சியை திறந்து வைத்தார்.

பின்னர் மாணவர்கள் நடித்த போதைக்கு எதிரான மௌன நாடகம் மற்றும் மீம்ஸ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். காவல் ஆணையாளர் அவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூன் மற்றும் சிறிய பலூன்களை பறக்கவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை ஒழிப்பு குறித்தும் ஓவிய போட்டிகள் மற்றும் சிறந்த வாசகங்கள் போட்டிகள் நடத்தப்பட்டது.

4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் சைக்கிள்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும் என காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்புரையாற்றினா.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), இணை ஆணையாளர்கள் பிரபாகரன், இ.கா.ப. (கிழக்கு மண்டலம்), R.V.ரம்யா பாரதி, இ.கா.ப., (வடக்கு மண்டலம்), துணை ஆணையாளர் (மயிலாப்பூர்) திஷா மிட்டல், இகா.ப.,  மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: