பாகிஸ்தான் பஜாரில் ஜவுளி விற்கும் மாஜி நடுவர்

லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் போட்டி நடுவர் அசாத் ரவூப். இவர் 2005ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக அறிமுகம் ஆனார். ஐ.சி.சி எலைட் பேனல் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியபோது, சில புக்கிஸ்களிடமிருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதையடுத்து ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். சூதாட்ட சர்ச்சை தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தபோது அசாத் ரவூப் இந்தியா வர மறுத்துவிட்டார். வழக்கு விசாரணையின் முடிவில் மும்பை நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதனால் அவருக்கு பிசிசிஐ 5 ஆண்டுகள் தடை விதித்தது. மேலும் இவர் மீது மும்பை மாடல் அழகி பாலியல் புகாரும் தெரிவித்தார். ஆனால் இதனை அவர் மறுத்தார்.

தற்போது லாகூர் லாந்தா பஜாரில் துணி மற்றும் ஷூக்கள் விற்பனை செய்யும் கடையை அசாத் ரவூப் நடத்தி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ``சூதாட்ட புகாருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. 2013ம் ஆண்டுக்கு பின் நான் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: