திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஊர்க்காவல் படை வீரர் சிக்கினார்

அண்ணாநகர்: திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(28). இவர் கோயம்பேடு காவல்நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றுகின்றார். அமைந்தகரை பகுதியை சேர்ந்த 23 வயது பெண், சென்னை தாம்பரத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். இந்த பெண்ணை சிவகுமார், கடந்த 8 வருடங்களாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால்  சிவகுமாருடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த சிவகுமார், அந்த பெண்ணிடம் தினமும் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கும் வரும் வழியில் மடக்கி    “என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்யவில்லையென்றால் கொலை செய்துவிடுவேன்’’ என்று அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

நேற்றிரவு வேலை முடிந்து அமைந்தகரை பகுதியில் அந்த பெண் நடந்துவந்தபோது சிவகுமாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றுள்ளார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற சிவகுமார், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, “என்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா?  இல்லையா? என்று மிரட்டியதுடன் நீயும் நானும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படத்தை இணையதளம் மூலமாக வெளியிடுவேன்’’ என்று மிரட்டியதுடன் இந்த இடத்துக்கு நாளை வருவேன் நீ பதில் சொல்ல வேண்டும்’’ என்று அங்கிருந்து சிவகுமார் சென்றுவிட்டார். இதனால் பயந்துபோன அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று அதிகாலை சிவகுமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: