×

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10% முதல் 30% வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.1,678 கோடி வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி வருவதாகவும், வழக்குப்பதிவு செய்த பின்னர் வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயலவில்லை என தெரிவித்தனர். மேலும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தைத் திரும்பத் தர தயாராக இருப்பதால், முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் காவல்துறை தரப்பில், பணத்தை திருப்பித் தருவார்கள் என்ற உத்தரவத்தை நம்ப முடியாது எனவும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவித்தால், அவர்கள் பணத்துடன் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் அச்சம்  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற கூடாது எனவும், முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்கவும் உத்தரவிட்டார். காவல்துறை விசாரணை முடியும் வரை மேற்கொண்டு யாரிடமும் டெபாசிட் மேற்கொள்ளகூடாது என்றும்,  டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரியையும் நியமித்துள்ளார்.பணத்தைத் திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8 ம் தேதி வரை வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Aruthra Gold Company ,Chennai High Court , Arudra, Gold Company, Managing Director, Arrest, Interim Prohibition, Chennai High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...