திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  உள்ள திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு  திருக்கோயில்களுக்கு ரூபாய் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 அக்டோபர் 8ம் தேதி கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த மாதமான நவ.1ம் தேதி முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 2021 ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பசலியில் துறை நடவடிக்கையால் கடந்த 2021 ஜூலை 1ம் தேதி முதல் நாளது தேதி வரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை 1 ரூ. 30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும்,  இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும்,  இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான திருக்கோயில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.6.29 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.4.33 கோடியும்,  மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி திருக்கோயிலில்  ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி திருக்கோயிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில்  திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: