திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 23 முதல் 33 வரையுள்ள வார்டுகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு, மழைநீர் கால்வாய் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, மாமன்ற உறுப்பினர்களின் தலைவர் ராமலிங்கம் ஆகியோர், மாதவரம் மண்டல உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பிரிவு அதிகாரிகளும் பணியாற்றவேண்டும். என அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாதவரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கழிப்பிடம் மற்றும் கால்வாய் பணிகளை மேயர், எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், அதிகாரிகள் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.