×

உழவர் சந்தைகளுக்கு காய்கறி, பழங்களின் வரத்தை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை-வேளாண் விற்பனைத்துறையுடன் இணைந்து களப்பணி

சேலம் : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பிரசித்தம். பனமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை, கொடி வகை காய்கறிகள், கீரைகள் போன்ற காய்கறி பயிர்களும். மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழவகைகளும். அரளி, மல்லிகை, ரோஜா, சம்பங்கி, நந்தியாவட்டம் போன்ற மலர் வகைகளும் சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வறட்சியான பகுதிகளிலும் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய சொட்டுநீர் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

சிறு- குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பழப்பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் மலர் பயிர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலமாக பழச்செடிகள், காய்கறி நாற்றுகள், மலர் செடிகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவிக்ககூடிய காய்கறி பழங்கள் தங்கள் அருகாமையில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், விவசாயிகளின் எண்ணிக்கையையும், காய்கறி பழங்களின் வரத்தையும் அதிகப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை இணைந்து களப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபரங்கள் தேவைப்படக்கூடிய விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை(96002 84443, 96776 36969, 98657 55987, 99659 93344) தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் அளித்து திட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Salem: Horticulture is popular in the Panamarathupatty area. Tomatoes in the palm grove and surrounding area,
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்