×

‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை துவக்கம்

கோவில்பட்டி : ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ்  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் சுங்குடி சேலை மற்றும் பனை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

நெல்லை ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்கப்பட்டபோது, ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் மட்டுமின்றி, மாநகர மக்களும் ரயில் நிலைய பனை பொருள் அங்காடியை தேடிச்சென்று பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். மதுரை ரயில் நிலையத்தில் தற்போது மீண்டும் சுங்குடி சேலை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருட்களை விற்பதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காராச்சேவு, தென்காசி மற்றும் செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூரில் பனை பொருட்கள், காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ், பழனியில் பஞ்சாமிர்தம், பரமக்குடியில் மிளகாய் வத்தல், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், சங்கரன்கோவிலில் மாம்பழம் போன்ற விவசாய பொருட்கள், சிவகாசியில் டைரிகள் நோட்டு புத்தகங்கள்,மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டையில் பலாப்பழம், சிவகங்கையில் செட்டிநாடு கொட்டான்,ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, கொடைக்கானல் ரோட்டில் பன்னீர் திராட்சை, திருமங்கலத்தில் கைலிகள், ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை, அம்பாசமுத்திரத்தில் பத்தமடை கோரை பாய், மணப்பாறையில் முறுக்கு, புனலூரில் மிளகு, கொட்டாரகராவில் முந்திரி ஆகியவை விற்பனை செய்வதற்கு விருப்ப மனு கோரப்பட்டது. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதியில் இந்த உள்ளூர் பொருட்களை விற்றுக் கொள்ளலாம்.

 பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதன்மூலம் பயணிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் அப்பகுதியில் பிரபலமான பொருட்களை எளிதில் வாங்கி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவில்பட்டி ரயில் நிலையம் சார்பில்  புவிசார்  குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை நிலையம்   தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  சிபிஎஸ்ஆர்  கொண்டல்சாமி, விருதுநகர் வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ்,  கோவில்பட்டி ரயில்  நிலைய அதிகாரி மகாராஜ்சிங்மீனா, ரயில்வே பாதுகாப்பு படை  உதவி ஆய்வாளர்  சந்திரன், ஏகேஆர் கடலை மிட்டாய் உரிமையாளர்கள் மாரிச்சாமி,  மணிசங்கர்,  கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும்  விற்பனையாளர்கள்  நலச்சங்கத்தின் தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன்,  சேகர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti , Kovilpatti, One Station One object, Railway Station,Kadalaimittai
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...