×

விஐடியில் முன்னேற்பாடுகள் ஆய்வு எஸ்ஐ பணிக்கான தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும்-டிஐஜி தகவல்

வேலூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேர்வு மையமாக விஐடி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 5 ஆயிரத்து 434 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையத்தின் முன்னேற்பாடுகள் குறித்து டிஐஜி ஆனிவிஜயா, எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.  பின்னர் டிஐஜி ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் விஐடியில் நடைபெறும் எஸ்ஐ தேர்வை 5 ஆயிரத்து 400 பேர் எழுத உள்ளனர்.

இதில் 963 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையத்திற்கு தேர்வாளர்கள் வருவதற்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் இயக்கப்படும். தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்குள், பிற்பகல் 2.30 மணிக்குள் வர வேண்டும். தேர்வாளர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களது சொந்த செலவில் மதிய உணவை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு மையத்தில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்’ என்றார். ஆய்வின் போது, ஏடிஎஸ்பி முத்துசாமி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.


Tags : VIT , Vellore: To fill 444 Sub-Inspector posts in the Taluka and Armed Forces conducted by the Tamil Nadu Uniformed Personnel Selection Board.
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…