பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப்பகுதிகளில் காட்டு யானைகள் வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அடிக்கடி மனித - வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.
மனித வனவிலங்குகள் மோதலை தவிர்ப்பதற்காக வனத்துறை சார்பில் குடியிருப்புகள் ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதை முன்கூட்டியே அலாரம் ஒலி எழுப்பி தெரிவிக்கும் நவீன கருவிகள் பொறுத்தும் பணி, கூடலூர் வனக்கோட்டம் பிதர்காடு வனச்சரகம் பென்னை பகுதியில் உதவி வனப்பாதுகாவலர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வனவர் ஜார்ஜ்பிரவீன்சன்,வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கருவிகளை பொறுத்தி அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்மூலம் யானைகள் ஊருக்குள் நுழைவதை கிராம மக்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்து கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.