கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் வனவிலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், வன விலங்குகளை ஒலி எழுப்பி விரட்டும் மூங்கில் கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு வரலாற்று பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான காட்சிப்பொருளாக வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், கோடை வறட்சி காலத்தில் உணவு, தண்ணீர் தேடி யானைகள், காட்டுப்பன்றி கூட்டங்கள் அடிக்கடி ஊருக்குள் வந்து, விவசாய நிலங்களை நாசம் செய்கின்றன. விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றை கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை. ஆனால், விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறைதான் மூங்கில் பன்றி முடுக்கி. லிட்டர் படி அளவிலான சுற்றளவு கொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்துக்கொண்டு, நடுக்கணுவில் வாசல் போல துளையிட்டு, காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனர்.

மேல், கீழ் கணுக்களை செதுக்கி, வில்லைப் போல வளைத்து, கயிற்றால் இறுக்கி கட்டிக் கொள்கின்றனர். இப்போது அம்புபோல் ஒரு குச்சியை அந்த கயிற்றில் கட்டி விடுகிறார்கள். இதைபோல் நிறைய செய்து, விவசாய நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் கட்டி தொங்க விடுகின்றனர். காற்று வீசும் போது விரட்டியின் நடுவில் கட்டி இருக்கும் குச்சி, மூங்கில் பொனாய் மேல் மோதும். அப்போது மத்தளம் அடிப்பது போல் ‘டம டம’ என்று சத்தம் வரும். மேலும், மூங்கில் தட்டி, மனிதன் நிற்பபோல் காட்சியளிப்பதாலும், டம டம சத்தத்தாலும், யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், இந்த சத்தம் கேட்டு ஓடிப்போய் விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: