ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது

மதுரை: மதுரையில் ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்திருந்த வாலிபர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றம் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும், அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சம், மதுரை தெற்குவாசல் பகுதி மறவர் சாவடி பகுதியில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி குருசாமி தபாலாவுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் தெற்குவாசல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

 

இதில் மஞ்சணக்கார தெருவை சேர்ந்த ராஜாராம் (36) என்பவருக்கு சொந்தமான கடையில் 10 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட திமிங்கல எச்சத்தை சேகரித்து கொண்டு வந்து, கடையில் பதுக்கி வைத்து ராஜாராம் விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

அவருக்கு உடந்தையாக அவரது நண்பர்கள் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த கவி (48) ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜாராம் உட்பட 3 பேரையும் கைது செய்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த திமிங்கல எச்சத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘‘‘அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை இவர்களுக்கு சப்ளை செய்தது யார், எத்தனை நாட்களாக இந்த தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

Related Stories: