ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பணத்தகராறில் வேலி கற்கள் உடைக்கப்பட்டதாக மூதாட்டி புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சின்னப்பிள்ளை வட்டத்தை சேர்ந்தவர் ராகினி (66). இவருக்கு அதே பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது மகன் மாணிக்கராஜ் என்பவர் பெங்களூருவில் வசிக்கிறார். இவர் அச்சமங்கலம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரிடம் பல லட்ச ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தாராம்.
இதுதொடர்பாக கிருஷ்ணன் அவ்வப்போது ராகினியிடம் வந்து, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜோலார்பேட்டை போலீசில் ராகினி புகார் அளித்திருந்தாராம். அப்போது போலீசார், கிருஷ்ணனை வரவழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தார்களாம். இந்நிலையில் கடந்த 21ம் தேதி ராகினியின் நிலத்தில் இருந்த வேலி கற்களை மர்மநபர்கள் உடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ராகினி, நேற்று ஜோலார்பேட்டை போலீசில் மீண்டும் புகார் அளித்தார். அதில், கிருஷ்ணனின் ஆதரவாளர்கள்தான் தங்கள் நிலத்தில் இருந்த வேலிக்கற்களை சேதப்படுத்தியிருப்பார்கள் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.