அம்பாந்துறை: இலங்கை சென்றுள்ள இந்திய அணி அங்கு தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.டி20 ஆட்டங்கள் ஜூன் 23, 25, 27 ஆகிய தேதிகளில் அம்பாந்துறையில் உள்ள தம்புல்லாவில் நடைபெற உள்ளன. தொடர்நது ஒருநாள் ஆட்டங்கள் ஜூலை 1, 4, 7 தேதிகளில் பல்லேகலேவில் நடக்கும். மிதாலி ராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஹர்மன்பிரீத் முதல்முறையாக ஒருநாள் அணிக்கும் கேப்டனாக களம் காண இருக்கிறார். மற்றொரு மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியும் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் அனுபவ வீராங்கனைகள் மந்தானா, ராஜேஸ்வரி, மேக்னா, ஷபாலி, தீப்தி, பூஜா ஆகியோர் டி20, ஒருநாள் என 2 அணிகளிலும் இடம் பிடித்திருப்பது பலம்.
இன்று தொடங்கும் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்க முனைப்புக் காட்டும். அது எளிதாகவும் இருக்கும் என்று வரலாறு சொல்கிறது. இந்த 2 அணிகளும் மோதிய 17 டி20 ஆட்டங்களில் இந்தியா 14 ஆட்டங்களில் வென்று இருக்கிறது. அதிலும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட இந்தியா தோற்கவில்லை. அதே நேரத்தில் சமரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். அனுபவ, அறிமுக வீராங்கனைகள் கொண்ட இலங்கை அணி சாதிக்க துடிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம்.