மேலூரில் ஊரணியை சுற்றி நட்ட மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்த நகராட்சி ஒப்பந்ததாரர்: மக்கள் கடும் எதிர்ப்பு

மேலூர்: மேலூர் நகராட்சியில் உள்ள ஊரணியை சுற்றி பொதுமக்கள் ஓராண்டுக்கு முன்பு நடவு செய்த மரக்கன்றுகளை நகராட்சி ஒப்பந்ததாரர்  பிடுங்கி எறிந்ததற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலூர் நகராட்சி 21வது வார்டில் உள்ள மலம்பட்டி தம்மம் ஊரணியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் கண்மாயை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஊரணியை சுற்றி தென்னங்கன்று, நாவல் மரங்கள் என ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு 200 மரக்கன்றுகள் அப்பகுதி மக்கள் சார்பில் நடப்பட்டிருந்தன.

தற்போது செழித்து வளர்ந்துள்ள இம்மரங்களில் இருந்து 50 தென்னங்கன்றுகளை நகராட்சி ஒப்பந்தகாரர் நேற்று பிடுங்கி எறிந்து விட்டு, தனது பணியை மேற்கொண்டுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  விரைந்து அவ்விடத்திற்கு வந்த நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் மக்களை சமாதானப்படுத்தினர்.

 மரக்கன்றுகளை அகற்றாமல் பணியை மேற்கொள்ள எந்த எதிர்ப்பும் இல்லை, இடையூறும் செய்ய மாட்டோம் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் அப்போது தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: