வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகமாக உள்ளது. இதனால், இப்பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் கலன்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது உலர் கலன்களில் தொடர்ந்து கொப்பரை உலர வைக்கும் பணி நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் கொப்பரைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்  மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முதல் வரை வெயிலின் தாக்கம் அதிகமானபோது கொப்பரை உற்பத்தி அதிகமாக இருந்தது. அதன்பின், கடந்த ஏப்ரல் 2வது வாரம் மற்றும் இம்மாத துவக்கத்தில் சில வாரமாக கோடைமழை இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி பெய்தது. இதனால், கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தடைப்பட்டு, கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால், கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், தேங்காய் உற்பத்தி அதிகரிப்பாலும், கொப்பரைக்கு  அதிக கிராக்கியாலும் தேங்காயை உடைத்து காய வைத்து கொப்பரையாக மாற்றி, கொப்பரை உற்பத்தியை விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:  ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் இருக்கும்போது, கொப்பரை உற்பத்தி அதிகரிக்கும். சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 750 டன் வரை கொப்பரை வெளி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில், கடந்த சில வாரமாக அடிக்கடி பெய்த மழையால் கலன்களில் கொப்பரை உலரவைப்பது மிகவும் குறைந்தது. இதனால், கொப்பரை ஏற்றுமதி குறைந்து, அந்நேரத்தில் விற்பனையும் மந்தமடைந்தது. இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் வெகுநாட்களுக்கு பிறகு  வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகமானது. நேற்று வரை  அக்னிநட்சத்திரம் என்பதால், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது. தற்போது, கலன்களில் கொப்பரை உலர வைப்பது தீவிரத்தால், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொப்பரை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: