பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக பன்னீர் திராட்சையை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக மகசூலுடன் லாபம் கிடைத்து வருவதால் மாவட்டத்தில் வழக்கமாக பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் பார்வை தற்போது திராட்சை சாகுபடி பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது. .இதனால் மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறையினர் மூலம் திராட்சை சாகுபடி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக அரபு நாட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பியுள்ள இவர் சோதனை முயற்சியாக தனது நிலத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்துள்ளார். கடந்த ஆண்டு மாவட்ட தோட்டகலைத்துறை உதவியுடன் மான்யத் தொகை பெற்று பந்தல் அமைத்துள்ள இவர் தேனி மாவட்டத்திலிருந்து பன்னீர் திராட்சை கன்றுகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் நடவு செய்து.
இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் தற்போது கொத்து கொத்தாக பந்தல் நிறைய திராட்சை கொத்துகள் காய்த்து குலுங்குவது அப்பகுதி விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரசாயண உரமோ பூச்சிக்கொல்லியோ பயன்படுத்தாமல் மீனமிலம். பஞ்சகவ்யாவுடன், கோழி பண்ணை கழிவு மற்றும் தொழு உரங்களை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருவதால் அதிக மகசூல் கிடைப்பதுடன் தரமான திராட்சைபழங்களை உற்பத்தி செய்யமுடிவதாக விவசாயி பரசுராமன் தெரிவித்தார். மேலும் ஆண்டுக்கு 3 போகம் திராட்சை அறுவடை செய்ய முடியும் என்றும் இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஒருஏக்கரில் சராசரியாக 5 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர் முதல் முறை பந்தல் அமைத்து திராட்சை நடவு செய்துது மட்டுமே கூடுதல் செலவினம் அதன் பின் முறையாக பராமரித்தால் போதும் 20 ஆண்டுகள் வரை இதே கொடியில் மகசூல் செய்ய முடியும் என்பதால் சாகுபடி செலவும் குறையும் என ஆர்வமுடன் தெரிவித்தார்.