ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் இருவரும் தப்பியோடிவிட்டனர். கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மருதூரில் எஸ்.பி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், வங்கியுடன் இணைந்த ஏடிஎம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் மட்டும் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் இருவர் மருதூரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்குள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அதில், ஒரு ஆசாமி வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொரு ஆசாமி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து மெஷினை உடைக்க முயற்சி செய்துள்ளான். அப்போது சைரன் ஒலிக்கவே இருவரும் தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: