ஜகார்தா: ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடந்து வரும் இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்தது.
அடுத்து ஜப்பானிடம் தோல்வியை சந்தித்தது. சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேற இந்தோனேசியாவை 16 கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயம். ஆனால், அதை சாதித்துக் காட்டி சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. மேலும் ஜப்பான், மலேசியா, கொரியா அணிகளும் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று நடந்த முதல் சூப்பர்-4 ஆட்டத்தில் மலேசியா-கொரியா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
தொடர்ந்து 2வது ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. அதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. அதன்மூலம் லீக் சுற்றில் ஜப்பானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.சூப்பர்-4 சுற்றில் இந்தியா - மலேசியா மோதும் போட்டி இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது.