சென்னை: கடந்த 2002-03 முதல் 2006-07 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும்,2009-10ம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக 2015ம் ஆண்டு 6 வழக்குகள் தொடரப்பட்டன. அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்குஎதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி ெசய்யப்படுகிறது. மேலும், சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது, குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.