50 கிலோவாட் மின்சாரம் கலெக்டர் ஆபிஸ் மாடியில் சூரிய சக்தி மின் உற்பத்தி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக மேல்தளத்தில் 50 கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டினை அதிகப்படுத்தவும், மரபுசாரா எரிசக்தி பயன்பாடுகள் குறிப்பாக சூரிய மின்சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனங்களை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டு சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக மேல்தளத்தில் ₹20 லட்சத்தில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கிவைத்தார். இந்த சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் இயங்குவது மட்டும் அல்லாமல் மீதமுள்ள மின்சாரமானது மின்வாரியத்திற்கு அனுப்பி சேமிக்கப்படுகிறது.

எனவே இந்த சூரிய சக்தி அமைப்பினை ஏற்படுத்தும் அரசு அலுவலங்களில் மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு மின்சார கட்டணமானது குறைகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 50 கிலோவாட் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துகழக நாமக்கல் அலுவலகத்தில் 15 கிலோ வாட் முன்மாதிரியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்ரமணியன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: