நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62ஆவது பழக்கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நீலகிரி காலநிலையில் விளையும் பேரி, பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், துரியன், பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்களும், அழிவு நிலையில் உள்ள டவுட்டு பழம், ரேகன் பழம், சீதா உள்ளிட்ட பழங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பில் 25 அரங்குகள் பழக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பழங்களால் ஆன கழுகு, டெடிபேர், புலி, டிராகன், மீன், தாஜ்மஹால், கோயில் தேர் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மெட்ரிக் டன் கருப்பு மற்றும் பச்சை திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட கழுகு மற்றும் கரடி வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 9 அடி உயரம், 12 அடி நீளத்தில் கழுகு மற்றும் 9 அடி உயரத்தில் கரடி வடிவமைக்கப்பட்டிருந்தது.