சிறுமிக்கு பாலியல் தொல்லை சித்த மருத்துவர் போக்சோவில் கைது

பெரம்பூர்:  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  சித்த மருத்துவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுமதி (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 7 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து  வருகிறாள். நேற்று முன்தினம் மாலை இந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுடன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு  இருந்தாள்.

அப்போது, அதே பகுதியில் சித்தா கிளினிக் நடத்தி வரும்  பாலசுப்பிரமணியம் (65) என்பவர் அங்கு வந்து, சிறுமி மற்றும் சிறுவனை தனது  கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார். கிளினிக்கில், சிறுவனை வெளியே அமர வைத்த பாலசுப்பிரமணியம், சிறுமியை மட்டும் உள்ளே  அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து சிறுமியை வெளியே அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு சிறுமி மற்றும் சிறுவன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது, சிறுமியின் தாய் இவர்களை பார்த்து, ‘‘இவ்வளவு நேரம் எங்கு சென்றீர்கள்’’, என்று கேட்டுள்ளார். அதற்கு, அந்த சிறுவன், ‘‘அருகில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் அங்கிள், அடிக்கடி எங்களை அவரது கிளினிக்கிற்கு அழைத்து செல்கிறார். ஆனால், அங்கு என்னை வெளியில் அமர வைத்துவிட்டு, சிறுமியை மட்டும் தனியாக உள்ளே அழைத்து சென்று  விளையாடுகிறார்,’’ என கூறியுள்ளான்.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து துருவித் துருவி விசாரித்தபோது, ‘‘நீ என்னை அடிக்காமல் இருந்தால், நான் உண்மையை சொல்கிறேன்,’’ என சிறுமி அழுதபடி கூறினாள். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், பொறுமையாக  சிறுமியிடம் பேச்சு கொடுத்து, என்ன நடந்தது, என கேட்டுள்ளார். அப்போது  சிறுமி, ‘‘நமது வீட்டின் கீழ் பகுதியில் குடியிருக்கும் டாக்டர் அங்கிள், அடிக்கடி என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவ்வப்போது, அவரது கிளினிக்கிற்கும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே  யாரிடமும் கூற வேண்டாம் என தெரிவித்தார்,’’ என கூறினாள்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பாண்டிச்சேரியில் உள்ள டாக்டரின் மனைவி  மற்றும் மகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பாண்டிச்சேரியில் இருந்து டாக்டரின் மனைவி மற்றும் மகள் சென்னைக்கு வந்து, சிறுமியை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது, சிறுமி பாலியல்  துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. புகாரின் பேரில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று பாலசுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: