ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் போலீசில் புகார் கொடுக்கலாம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை: ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் சொத்துகளையும், நிலங்களையும் பாதுகாப்பதாககூறி வழக்கு தொடர்ந்து, அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வைத்துக் கொண்டு, ஆய்வு என்ற பெயரில் கோயில் தொடர்புடைய நடவடிக்கைகளில் தலையிட்டு மிரட்டுவதாக சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக சேலம்  பள்ளப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கோயில் சொத்துகளையும், நகைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் எதிரிகளை சம்பாதித்துள்ளேன். சட்டவிரோத செயலில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகளை மிரட்டவில்லை என்று விளக்கம் அளித்ததுடன் அதுகுறித்த உத்தரவாதத்தையும் மனுவாக தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனது முறையீடுகளுக்கு நிவாரணம் கேட்க மனுதாரருக்கு உரிமையுள்ளது. அதை நீதிமன்றமோ அதிகாரிகளோ நெரிக்கக்கூடாது. சில அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்களை பாதுகாக்க வேண்டும்.அதேநேரத்தில் ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறி செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளிக்கலாம்.மனுதாரர், கோயில்களுக்கு செல்லும்போது அங்கிருப்பவர்களுடன் தகராறில் ஈடுபடக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும் மட்டுமே அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், சட்டப்படி செயல்படுவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கோயில்களில் உள்ள சொத்துகள், நகைகள் முறையாக கையாளப்படாதது குறித்த விஷயங்களை அம்பலப்படுத்துவோரின் குரல்வலையை நெரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: