சென்னை: ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் சொத்துகளையும், நிலங்களையும் பாதுகாப்பதாககூறி வழக்கு தொடர்ந்து, அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வைத்துக் கொண்டு, ஆய்வு என்ற பெயரில் கோயில் தொடர்புடைய நடவடிக்கைகளில் தலையிட்டு மிரட்டுவதாக சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கோயில் சொத்துகளையும், நகைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் எதிரிகளை சம்பாதித்துள்ளேன். சட்டவிரோத செயலில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகளை மிரட்டவில்லை என்று விளக்கம் அளித்ததுடன் அதுகுறித்த உத்தரவாதத்தையும் மனுவாக தாக்கல் செய்தார்.