5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடந்த 1975 முதல் பேரூராட்சிக்கு சொந்தமான பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பழைய ஷெட்டுகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகிறது. 46 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு வளர்ச்சியும், முன்னேற்றமும் கொண்டு வருவதற்கு கடந்த ஆட்சியில் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையினர் அளித்த தகவலின்படி குடோன்கள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் கால தாமதம் ஆகின்றது எனவும், மேலும் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சின்னசெவலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கிருபாபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நில உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கருத்துருவிற்காக அனுப்பியுள்ளோம் எனவும், நில உரிமை மாற்றம் செய்தபின்பு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

 

திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 27 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை உழவு மற்றும் உற்பத்திக்கான செலவாகின்றது. தான் விளைவித்த நெல்மணிகளை சேறு, தண்ணியிலிருந்து கஷ்டப்பட்டு விற்பனைக்காக   வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால், நெல் மூட்டைகளை இருப்பு வைக்க இடமில்லாமல்,  போக்குவரத்திற்கு இடைஞ்சலாக தெருவோரங்களில் கொட்டி விற்பனைக்காக வைக்க வேண்டிய நிலை உள்ளது.

 

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 5,000 நெல் மூட்டைகள் நேற்று பெய்த மழையால் நனைந்தது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: