தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

சென்னை : பல முறைகேடுகள் இருப்பதால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 1 முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகளில் 10 புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தளவாடத் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய படிப்புகளை வடிவமைத்து நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும்.நீட் தேர்வுக்குப் பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. பழைய செமஸ்டர் கட்டணமே வசூலிக்கப்படும். கட்டண உயர்வு குறித்த AICTE பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு சேருவதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை. மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.புதிய கல்விக் கொள்கையில் பல முறைகேடுகள் உள்ளன. கூட்டாட்சி தத்துவத்தில் முதல்வர் எதை பேச வேண்டுமோ அதை தெளிவாக பேசியுள்ளார்.மாநிலத்திற்கு என்ன தேவை என்று குறிப்பிட வேண்டியது ஒரு முதல்வரின் கடமை, அதைத் தான் முதல்வர் செய்துள்ளார்.பிரதமரிடம் தமிழகத்தின் நிலைப்பாடு, என்ன தேவை என்பதை முதல்வர் வைத்ததில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவினர் குறைகூறி வருகின்றனர். தமிழ்நாடு வளர வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இல்லை, என்றார்.

Related Stories: