டெல்லி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ சில வழக்குகளை தொடுத்துள்ளது. அதில் குறிப்பாக 2008 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனர்களுக்கு இந்தியாவில் பணி புரிவதற்கான விசா எடுத்துக் கொடுப்பதில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு தலா 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் ஒரு புகாரானது எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனிடையே டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்ஜாமீன் மனுவை கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட நிலையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டுமானால் அதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதனிடையே நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்றும் ஆஜரானார். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு கிளம்புவதற்கு முன்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்; அதில்; தன் மீது தொடர்ச்சியாக பொய் வழக்கு போடப்படுவதாகவும், தானும் தன் குடும்பமும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
பொய் வழக்குகளை போட்டு காங்கிரஸ் எம்.பிக்களின் குரல்களை ஒடுக்க மத்திய அரசு முயல்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழு சம்பந்தமான குறிப்புகளை சிபிஐ சோதனையின்போது கைப்பற்றி விட்டது. சிபிஐயின் நடவடிக்கை எனது நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.