அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு : தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வில் கட்டாய தமிழ் மொழியானது தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. இது போன்ற தேர்வுகளில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.

மேலும் தொகுதி III, IV, VIIB போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழியானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில் ஆங்கில மொழி பாடம் மட்டுமே படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பதில் அவர்களுக்கு என்று தனியாக ஆங்கிலத் தேர்வு நடத்தப்படும்.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். இந்த ஆணை 40 சதவிகிதத்துக்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பொருந்தும். இவ்விலக்கினைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: