கோத்தகிரி: மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் காட்டு யானை கூட்டம் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது அங்குள்ள சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த காரை சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானை திடீரென வழிமறித்தது. இந்த காட்சியை அவ்வழியாக சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே இரவு நேரங்களில் மலைப்பாதையில் செல்வோர் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.