அம்பத்தூர்: கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம், பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள், சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படை போலீசார், நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த வீட்டை சுற்றி வளைத்து, உள்ளே நுழைந்தனர். அங்கு, ஏராளமான கத்திகளுடன் 7 பேர் கஞ்சா போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த பிரகாஷ் (27), ரெட்டேரி, லட்சுமிபுரம், கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (26), புத்தாகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (20), வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (29), ஐசக் ராபர்ட் (19), பெரம்பூரை சேர்ந்த ஈசாக் (22), திருமுல்லைவாயலை சேரந்த கிருஷ்ணகுமார் (19) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்ட ஆவடி பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன் தரப்புக்கும், பெரம்பூர் காந்தி சிலை பகுதியை சேர்ந்த பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பதில் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தொழில் போட்டி மற்றும் யார் பெரிய ரவுடி என்பதில் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.