கொளத்தூரில் 2.83 கோடியில் கால்பந்து மைதானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் உள்ள மைதானத்தில் ₹2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள செயற்கை புல் கால்பந்து மைதானம், சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் ₹1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ₹30 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ₹7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, ₹24 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் என மொத்தம் ₹2 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் சினேகா, மத்திய வட்டார துணை ஆணையர் அப்துல் ரஹ்மான், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: