கடைகள் மறு ஏலத்திற்கு எதிர்ப்பு: பூக்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் மறியல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமாக சுமார் 500க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சுமார் 244 கடைகள் வாடகை நிலுவை, வரி ஏய்ப்பு மற்றும் ஏலத்திற்கான காலம் முடிவுற்றுள்ளதாக கூறி, வரும் ஜூன் 6ம் தேதி மறு ஏலம் விடுவதற்காக அறிவிப்பை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த 244 கடைகளை பயன்படுத்தி வரும் பூக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், மறு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடைகளை தற்போது பயன்படுத்தி வரும் வியாபாரிகளுக்கே கடைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் பூக்களை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன், எஸ்ஐ அருண்குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Stories: