திருவள்ளூர் அருகே அதிகாலை பரபரப்பு: 1 கோடி ரூபாய் பொருட்களுடன் சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. திருவள்ளூர் அருகே போளிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை கன்டெய்னர் லாரி டெல்லிக்கு புறப்பட்டது.

திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் சென்றபோது கன்டெய்னரில்  இருந்து புகை வந்துள்ளது. இதனால் டிரைவர், லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் கம்பெனிக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து திருவள்ளூர்  போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் நடராஜன், மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தியபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அவர்கள் தீயை அணைக்க முயன்றபோது தீ வேகமாக பரவியது.இதனிடையே திருவூர், திருவள்ளூரில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Related Stories: