கட்டையால் அடித்து கல்லூரி பேராசிரியர் கொலை

கரூர்: கரூர் அருகே கல்லூரி பேராசிரியர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோயில் தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் அரவிந்த்(28). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது உறவினர் பனையம்பாளையம் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யா(20). கடந்த சில தினங்களுக்கு முன் நஞ்சைகாளகுறிச்சியில் கோயில் திருவிழா நடந்தது. இதில் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதற்காக ராஜபுரத்தை சேர்ந்த மதன்(25), அபிஷேக்(19) ஆகியோர், சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு சின்னதாராபுரத்திற்கு வரவழைத்தனர். நேற்றுமுன்தினம் இரவு சூர்யா, பேராசிரியர் அரவிந்த்தை துணைக்கு அழைத்துச் சென்றார். சின்னதாராபுரம் பங்களாதெரு அருகே இரு தரப்பினரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது மதன், அபிஷேக் உள்பட 3 பேர் சேர்ந்து கட்டையால் சூர்யாவை தாக்கினர். இதனை தடுக்க வந்த அரவிந்தையும் சரமாரி கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் இறந்தார். சூர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: