நட்பாக பழகியதால் விபரீதம்: கல்லூரி மாணவியை காரில் கடத்தி கட்டாய திருமணம்; 3 பேர் கைது

ஈரோடு: கல்லூரி மாணவியை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்த தொழிலாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 19 வயது இளம்பெண், பவானி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பெருந்துறை திங்களூர் நிச்சாம்பாளையம் காலனியை சேர்ந்த தேவராஜ் (32) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

தேவராஜூக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். மாணவி நட்பாக பழகுவதை காதல் என்று நினைத்த தேவராஜ், நேற்று முன்தினம் நண்பர்களுடன் அவரை காரில் கடத்திச்சென்று வலுக்கட்டாயமாக தாலி கட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தாலியை கழற்றி வீசி எறிந்துவிட்டு அவர்களிடம் இருந்து தப்பித்து திங்களூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, தேவராஜ், அவரது நண்பர்கள்  தமிழரசன் (24), ராஜூ என்ற சஞ்சன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேரையும் பெருந்துறையில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: